Sunday, March 31, 2013

சரியான திசையில் பயணிப்போம்


மாணவர்களின் இந்த போராட்டம் தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இவர்கள் தொலைநோக்கு பார்வை இல்லாமல் போராடுகிறார்கள். வெறும் கோபத்தை வைத்து போராடுகிறார்கள். கோபம் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க உதவுமே ஒழிய ஒரு போராட்டத்தை முடித்து வைக்க உதவாது. அன்பும் அறிவும் தான் ஒரு போராட்டத்தை முடித்து வைக்க உதவும்.
முதலில் தனி ஈழம் என்பதே தமிழர்கள் சந்தித்து வரும் கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வாகாது. ஏனென்றால் தனி ஈழம் வெற்றிகரமாக உருவானாலும் ஒரு தீவு அந்த தீவுக்குள் இரண்டு நாடுகள் என்ற நிலை உருவாகும். ஈழ இலங்கை எல்லைப் பகுதியில் இரு ராணுவங்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடக்கும். ஈழத்துக்குள் இலங்கையின் ஊடுருவல் என்ற பெரும் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். இப்பொழுது தமிழக மீனவர்களை கொல்வது போல ஈழ மீனவர்களை சிங்கள ராணுவம் தொடர்ந்து கொல்லும். சண்டை என்பது தீராததாகத்தான் இருக்கும். சிங்கள அரசு என்ற ஒன்று தனித்து இயங்கும் வரை சிங்கள ராணுவம் என்று ஒன்று தனித்து இருக்கும் வரை அவர்கள் தமிழர்களை அழிக்கும் போக்கை நிறுத்தப் போவதில்லை. ஆனால் தமிழர்கள் இலங்கை முழுவதிலும் தங்கள் அதிகாரத்தை உரிமையை நிலைநாட்டினால் தனி சிங்கள அரசு என்று ஒன்று இல்லாமல் போகும். அதனால் தமிழர்களின் கனவு இலங்கை முழுவதிலும் தங்கள் அதிகாரத்தையும் உரிமையையும் நிலைநாட்டுவதாகத் தான் இருக்க வேண்டுமே ஒழிய ஈழம் என்ற எல்லைக்குள் சுருங்கி விடக்கூடாது.
இந்த போராட்டத்தின் மிகப் பெரிய தவறாக நான் பார்ர்கும் இன்னொரு விஷயம். தனி ஈழமா அல்லது தனி தமிழ்நாடா என்கிற கேள்வி.
தனி தமிழ் நாடு கேட்பது என்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளும் செயலன்றி வேறில்லை.
தனி தமிழ் நாடு கேட்பதின் முதல் சிக்கல், இந்திய அரசு அதற்கு எளிதில் ஒப்புகொள்ளாது. போராட்டம் வலுப் பெறும் பட்சத்தில் அவரகள் ராணுவத்தை கொண்டு அதை அடக்கும் அளவிற்கு செல்வார்கள். ராணுவம் ஒரு இடத்துக்குள் வந்தால் அவர்கள் என்னென்ன அநியாங்கள் செய்வார்களோ அனைத்தையும் செய்வார்கள். அவ்வளவு கசப்பான அனுபவங்களையும் எதிர்கொண்டு போராடினாலும் அந்த போராட்டம் பல பத்தாண்டுகளுக்கும் நீடிக்கும்.
இப்படியெல்லாம் போராடி தனி தமிழ் நாட்டை வென்றாலும் அதனால் நாம் அடையப் போகும் பலன் என்ன.
1. இப்பொழுது சகஜமாக சென்று கொண்டிருக்கும் கேரளாவிற்கும் ஆந்திராவுக்கும் கூட நாம் பாஸ்போர்ட் விசா எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
2. இந்தியாவிடம் சண்டை போட்டு தனித்து வந்த பிறகு வேலை தேடி அந்த எல்லைகளுக்குள் செல்லாமல் தமிழர்களால் இருக்க முடியுமா? அவர்களிடம் சண்டை போட்டு பிரிந்த வந்த பிறகு எந்த முகத்தை வைத்து கொண்டு அவர்களிடம் வேலை தேடி, தொழில் செய்ய நாம் போவது. அல்லது தனி தமிழ்நாடு கேட்பவர்கள் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்குள்ளேயே கிணற்று தவளைகளாக இருந்து விடலாம் என்று சொல்ல வருகிறார்களா?
இப்பொழுது தனி தமிழ்நாடு கேட்க வேண்டிய அவசியம் என்ன. ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் ஆட்சியில் இருப்பவர்களை மாற்றலாமே? ஏன் அரசாங்கத்தின் மீது கோபம் கொள்ள வேண்டும் அரசாங்கம் வெறும் வாகனம் தானே. ஆட்சி செய்பவர் அல்லவா அதை சரியான திசையிலோ தப்பான திசையிலோ கொண்டு செல்கிறார்?

No comments: